~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள்



சென்றவாரத்தில் மகனை பார்க்க சென்று இருந்தேன். அது என்னவோ தெரியவில்லை நான் போற ட்ரெயின் மட்டும் எப்பயும் லேட்டாக தான் கரூர் செல்கிறது. அன்று வழக்கம் போல 1 மணிநேரம் லேட். தூக்கம் கலைந்தது, அது என்ன ஸ்டேஷன் என்று தெரியவில்லை மணி பார்த்தேன் காலை 5.30 இந்த நேரத்தில் கண்டிப்பாக திருச்சி தான் வந்து இருக்கும் என்கிற எண்ணத்தில் சிரிது நேரம் புரண்டு படுத்தேன் தூக்கம் முழுவதுமாக கலைந்தது. பனி வேகமாக வண்டியில் ஊடுருவி இருந்ததால் பாத்ரூம் கண்டிப்பாக செல்லவேண்டும் என்கிற நிலைமையை உண்டாகியது. எழுந்து பாத்ரூம் சென்றேன், சைடு லோயரில் ஒரு பெண்மணி முக்காடுடன் அந்த அதிகாலையில் ஒரு புத்தகத்தை படித்து கொண்டு இருந்தார் . திருச்சி தாண்டிடுச்சா என்று கேட்டேன், ஆமாம் என்றார் அப்பொழுது எனது தெரிந்தது அவர் பெண் போலீஸ் என்று, பனியில் இருந்து காப்பற்றிகொள்ள முக்காடு போட்டு இருந்தார். நீங்க எங்க இறங்கனும் என்று கேட்டார். கரூர் என்று சொல்லியவாறே அங்கு இருந்து நடையைகட்டினேன். பல் துலக்கலாம் என்று பிரஷ் , பேஸ்ட் உடன் வாஷ்பேசின் பக்கம் வந்தேன் அவர் இன்னமும் அதே பக்கத்தை தான் படித்து கொண்டு இருந்தார். அந்த புத்தகத்தை பார்த்த போது அவர் ஏதோ தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது. . சிறிது நேரத்தில் அவர் கதவுக்கு அருகில் வந்து நின்றார், கதவின் ஜன்னல் வழியாக வந்துகொண்டு இருந்த பனியை கண்ணாடி ஜன்னலை கொண்டு அடைத்தார். குளிர் நின்றதின் நிம்மதியை அவரின் முகத்தில் பார்த்தேன். ஒரு புன்னகை செய்து தேங்க்ஸ் என்றேன்.

பதிலுக்கு புன்னகைத்தவர், எங்க இருந்து வரிங்க என்றார், சென்னை என்றேன் . சிறிது நேரத்தில் சகஜமாக பேசிக்கொள்ள ஆரமித்தோம். ஜன்னல் வழியாக சூரியன் எழுவது சிறிது தெரிந்தது. எனது வேலையை பற்றி கேட்டார், பொட்டி தட்டுறேன் என்று சொன்னதும் சிறிது முழித்தார். சிரித்து கொண்டே எனது வேலை பற்றி சொன்னேன். சம்பளம் எவ்வளவு என்றார் உண்மையை சொன்னால் இவ்வளவுதான என்று கேட்டு விடுவார் என்பதால் கொஞ்சம் அதிகமாக சொன்னேன். அவருக்கு லீவ் எப்படி என்று கேட்கும் போது அவரின் முகத்தில் ஒருவித ஏமாற்றத்தை பார்த்தேன். எங்களுக்கு லீவ் எல்லாம் இல்லைங்க 24 மணிநேரமும் நாங்க டுட்டில இருக்கணும். CL, EL, ML சிலதை சொன்னார். விஷேதத்துக்கு கலந்துக்க முடியாமல் சில நேரம் டுட்டி வந்துடும், எதிர்ப்பார்க்காத சில நேரத்தில் தூக்கம் இல்லாம வேலை பார்க்கவேண்டி வரும். சிறிது வினாடிகள் பேசாமல் இருந்தோம், எனது இருக்கைக்கு செல்கிறேன் என்று சொல்லி அவரிடம் இருந்து விடை பெற்றேன். 6 பர்த்தில் நான் மட்டுமே எழுத்து இருந்தேன் மற்றவர்கள் எல்லாம் தங்களது போர்வைக்குள் முடங்கி இருந்தார்கள். எனது பேக் எடுத்து கொண்டு அந்த பெண்மணி எதிரில் காலியாக இருந்த இடத்தில உட்கார்ந்தேன். 45 நிமிடத்தில் கரூர் வந்துவிடும் என்று அவரே பேச்சை ஆரமித்தார், நீங்க எது வரை போறீங்க என்று கேட்டேன், நானும் கரூர் தான் என்றார். இந்த ரூட் கொஞ்சம் ஈஸியா இருக்கும் அதனால தான் வரேன் என்றார். அந்த புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்படாமல் அதே பக்கங்களில் இருந்தது.

மகாதானபுரம் என்கிற இடத்தில சிக்னலுக்காக வண்டி நின்றது. வெளியே இறங்கி நின்றேன், வயதான ஒரு கிழவி வாழைபழங்களை விற்றுக்கொண்டு வந்தார். அவர் கடந்து சென்ற பிறகு குல்லாய் போட்ட ஒருவர் பழம், பழம் என்று கத்தினார். அந்த கத்தல் அவரின் இருந்த பெட்டியை தாண்டி செல்லவில்லை, அந்த கிழவியோ 2 பெட்டிகள் தாண்டி சென்றுவிட்டார். அந்த அதிகாலையில் பழம் கிடைக்காத விரக்தியில் அவர் உள்ளே சென்றார். வண்டி கிளம்ப தயாரானது நான் படிக்கட்டில் நின்று கொண்டே பார்த்தேன், விரக்தியில் தளர்ந்து நடந்து வந்தார் கிழவி, கையில் விற்காமல் இருந்த பழங்களை எல்லாம் தலையில் இருந்த கூடைக்கு சென்றது . திரும்பி பார்த்தேன் அந்த பெண்மணி ஒரு நோட்டில் வண்டி எங்கு எல்லாம் நிற்கிறதோ அப்போது எல்லாம் குறித்து கொண்டு வந்தார்.

கரூர் வர 20 நிமிடங்கள் இருக்கும், புத்தகத்தை பார்த்தேன் அந்த பக்கம் அப்படியே இருந்தது படிப்பதை அவர் நிறுத்தி வெகு நேரம் ஆனதை காட்டியது அந்த பக்கம். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், சென்னையில் சிறிது நேரம் வேலை செய்ததை பற்றி சொன்னார். கரூரில் எவ்வளவு நேரம் இருப்பிர்கள் என்று கேட்டேன் அடுத்து திருச்சி செல்லும் வண்டி 9.30 மணிக்கு வரும் அதில் செல்வதாக சொன்னார். வண்டி கரூர் வந்தடைந்தது இறங்கியவர் எனக்காக காத்துகொண்டு இருந்தார். நான் கிளம்புறேன் என்றேன், அடுத்த முறை திருச்சி வரும் போது பார்க்கலாம் என்று சொன்னேன். இது நடக்குமோ இல்லையோ ஒரு பேச்சுக்கு சொன்னேன். இருவர் பாதைகளும் பிரிந்தது என்னை எதிர் பார்த்து எனது மாமா காத்துகொண்டு இருந்தார். அடுத்த வண்டியை எதிர்பார்த்து அவர் நடைமேடையில் நின்று கொண்டு இருந்தார் கையில் அந்த புத்தகம்
அதே பக்கத்தை பிடித்தபடி இருந்தது.

வீட்டுக்கு சென்றதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது அவரின் பெயரை கேட்காமல்விட்டது.


சில நட்புகள் எல்லாம் இப்படி தான் சொல்லாமல் கொள்ளாமல் வரும், அப்படியே சென்றுவிடும்.